*/ மனிதனும் தெய்வமாகலாம் ~ Shreevidyalayam

மனிதனும் தெய்வமாகலாம்






1. சிறப்புகள் வாய்ந்த மனிதப்பிறவி






            

 "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது "
           



இப்படி பல வாக்கியங்களில் மனிதப்பிறவியை உயர்ந்தப் பிறவியாகஇலக்கிய நூல்களில்  சான்றோர்கள் பாடியுள்ளனர். 


இலக்கிய நூல்களில் மட்டுமின்றி அனைத்து மத நூல்களிலும், தத்துவ நூல்களிலும் சாஸ்திர நூல்களிலும், வேத, உபநிஷத்துகளிலும் மனிதப் பிறவியை சிறப்பித்தே வர்ணித்துள்ளனர்.


பூமியில் பலகோடி ஜீவன்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் மற்ற உயிரினங்களுக்கு கிடைக்காத உயர்ந்த அங்கீகாரம் மனிதப் பிறவிக்கு மட்டுமே கிடைத்துள்ளது.


நாமும் இங்கு மனிதப்பிறவியாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.எப்படி உணர்ந்து கொண்டு இருக்கின்றோம்.


இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உங்களுக்குள் கேட்டுப்  பாருங்கள்.

சிறந்த பிறவியா? சுமையான பிறவியா

 

ஒரு நாள் உயர்ந்தப் பிறவியாகவும் அடுத்த நாள் சவாலான சூழ்நிலைகள் எதிர்கொள்ளும்போது  சுமையாக மாறுவதெல்லாமில்லை

 

இந்த மனிதப்பிறவி முழுமையையும் ஒர் மனிதனால் சிறந்த பிறவியாகவும் உயர்ந்தப் பிறவியாகவும் உணர முடியும்..ஆனால் நாம் தான் நமக்கு கிடைத்த இந்தபொக்கிஷத்தை உணராமல் பறவையாக, பூவாக, மரமாக பிறப்பதைப் பற்றி  சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

 

ஏன் மனிதனுக்கு இத்தகைய உயர்ந்த அங்கீகாரம்


மனிதனுக்குள் படைக்கப்பட்டிருக்கும் ஆறாம் அறிவும், மனம் என்னும் இயந்திரமும் மனிதனுக்குக் கிடைத்த சிறப்பம்சங்கள் ஆகும் .இந்த  ஆறாம் அறிவைத் தான் பகுத்தறிவு என்றும் சொல்கின்றனர். இந்த ஆறாம் அறிவுக் கொண்டு மனிதனால் தெய்வீகம் என்னும். பரிணாம வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும். மனிதராய் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.  


நாம் அறிவியலில் சார்லஸ் டார்வின் மனிதன் எப்படி மற்ற  உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.மனிதனும் அடுத்த பரிணாம வளர்ச்சியான தெய்வம் என்னும் நிலைக்கு நகர இயலும். 


இதை நாம்  மனதின் சிற்றறிவு  கொண்டு பார்க்கப்படும் போது இது அகங்காரமாக கூட தெரியலாம். ஆனால் உண்மை என்னவெனில் மனிதனும் இருக்கும் தான் என்ற அகங்காரம் தான்  மனிதன் அந்த நிலையை அடைய இயலாமல் தகுதி  இழந்து இங்கு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறான். 


எல்லா மத நூல்களும், யோக சாஸ்த்திரத்திலும், வேத நூல்களும்  இதை தான் வலியுறுத்துகின்றது

 

எல்லா மனிதனும் அத்தகைய தகுதியுடன் தான் பிறக்கின்றான் ஆனால் மனித மனதின் மோகத்தால், போகத்தாலும் அந்த தகுதியை இழந்து விட்டான். 

 

மனிதன் எப்பொழுது உடல், மனம், உணர்வுகளை கடந்து தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்கிறானோ அந்த நொடி இந்த பிறப்பைச் சிறந்த பிறவியாக அனுபவம் செய்ய இயலும். எப்போது மனிதன்  தன்னுள் இயங்கும் பேராற்றலோடு இனைந்து  வாழ்கிறானோ அந்த நொடி  மனிதனின் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழும். 


இந்த நிலையில் தான் மனிதனுக்கு உண்மையான அமைதி, ஆனந்தம், வெற்றி, அன்பு,இனிமை  எல்லாம் உணர இயலும். இந்த உண்மையான உணர்வுகளை உணரவே மனிதனுக்கு மனம் என்னும் கருவி படைக்கப்பட்டிருக்கிறது..

இந்த நிலையில் மனிதனால் இனிமையான வாழ்வை வாழ இயலும்..

மனிதப் பிறப்பை சிறப்பிக்கும் இந்த நிலையை அடைவதே மனிதனின் முதற் கடமையுமாக அமைகிறது. இதுவே மனிதனாய் பிறந்த எல்லா மனிதனின் முதற்கடமையாகும். 


இதையே எல்லா மத நூல்களும், வேத உபநிடதமும் உரைக்கிறது. மனிதன் தான் உருவாக்கிய  சிற்றறிவு கொண்டு பார்த்து  இவை தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது

 

இந்த இனிமையான வாழ்வெல்லாம் எல்லா மனிதனுக்கும்  சாத்தியப்படுமா ? என்கிற கேள்வி எழலாம்.


இதை மேலும் விளக்க வேண்டுமெனில்  உங்கள் மேல் அதிகாரியோ அல்லது

உங்கள் பெற்றோரோ உங்களுக்கு ஒரு வேலைக் கடமையாக தரப்பட்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.  நீங்களும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த கடமையை சரியாக செய்து முடித்த விட்டீர்கள் எனில் எப்படி உங்களுக்கு அவர்களால் சலுகைகளும்,வெகுமதிகள் கிடைக்கப் படுகிறதோ அதுபோலவே மனிதன் தான் படைக்கப்பட்ட கடமையை சரியாக செய்து முடித்தால்  அந்த மனிதனுக்கு அந்த படைப்பு (கடவுள்) எல்லா இனிமையும் அருள் மழையாய் பொழிவார். 

 

இங்கு கடமை என்று  குறிப்பிடப்படுவது மனிதனின் வெளிச் சூழ்நிலையில் செய்யும் கடமையை குறிப்பிடப்படவே இல்லை.மனிதன் உள் நிலையில் தான் செய்ய வேண்டிய கடமை தான் மனிதனின் பிரதானக் கடமையாகும்.மனிதன் உள் நிலையில் இருக்கும் இடத்தைப் பொருத்தே மனிதனின் வெளிச் சூழ்நிலை அமைகிறது.உள்நிலை என்றால் இங்கு உடலையும், மனதையும் சொல்லவில்லை.  உடல்,மனம்,உணர்வு -களை கடந்து தன்னுள் இயங்கும் தன்னை இயக்கும் படைப்பின் பேராற்றலை உணர்ந்து முழு விழிப்பு நிலையை அடைவது .இந்த நிலையில் தான் மனிதன் வெளிச் சூழ்நிலையில் வாழ்தல் என்ற நிலையை அடைய முடியும்.இது மனிதனுக்கே
உரிய சிறப்பு வாய்ந்த நிலையாகும். இதை தான் நாம் ஆங்கிலத்தில் being என்று குறிப்பிடுகிறோம். 

 

உண்மையில்  வெளிச் சூழ்நிலை கடமைகள் மனிதனுக்கு மனிதனுக்கு மாறுபடும். மனிதன் வெளிச்சூழ்நிலையில் சிறப்புமிக்க  செயலாற்ற வேண்டும் எனில் முதலில் உள்நிலையில் மனிதனுக்கு விதிக்கப்பட்ட விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

 

மனிதன் இந்த நிலையில் வாழ்க்கையை வாழும் போது மட்டும் தான் வாழ்வில் முழுமையை உணர முடியும்.  இன்று மனிதன் வாழ்வில் முழுமையை உணர முடியாமல் இருப்பதற்கு மனிதனுள் இருக்கும் அறியாமையே

காரணமாகும்.

 

பல மனிதர்கள் வெளிச்சூழ்நிலையில் எல்லா கடமைகளையும் செய்த பின்னும் வாழ்வின்  முழுமை  உணர்வைப் பெறாமல் முதுமையில்  துன்பமயமாய் இருப்பதற்கு உள் நிலையில் தான் செய்ய வேண்டிய கடமை செய்யத் தவறியதே ஆகும்.மரணத்தின் வரை  மனிதனுக்கு இந்த வாய்ப்பு இருக்கிது .மனிதன் அந்த நிலையை உணராமலே மரணத்தை  தழுவும் போது மீண்டும்  இதே  பிறப்பு சுழற்ச்சியில் ஆழமாய் சிக்கி கொள்கிறான் .மரணத்தில் தருவாயிலாவது மனிதன் விழிப்பு நிலை அடைந்தே ஆக வேண்டும் .


இதை இன்னும் விளக்குவதானால் நீங்கள் உங்கள்  எஜமானர் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்யாவிடில் எப்படி மீண்டும் மீண்டும் அதே கடமையை முடிக்க நிர்பந்தப்படுத்தப்படுகிறீர்களோ அதே போல்  உங்கள் கடமைகள் முழுமை அடையும் வரை மீண்டும் மீண்டும் மனிதப்பிறவியில்  சுழன்று கொண்டு தான் இருக்க முடியும் .


  

மனிதன்  தனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆறாம் அறிவை விழிப்படைய செய்து விழிப்பு நிலையை அடைய அடைய எல்லா மனிதராலும் இந்த பிறப்பைச் சிறப்பித்து வர்ணிக்க இயலும்.இது மனிதனாய் பிறந்த எல்லா மனிதனுக்கும் சாத்தியமானதே. எது எல்லா மனிதனுக்கும் கடமையாக இருக்கிறதோ அப்போது அது எல்லா மனிதனுக்கும்  எந்த விதப் பேதமுமின்றி எளிமையாக சாத்தியப்படும். 

 

மனிதன் இந்த பிறப்பைச் சுமையாக உணர்வதற்கு காரணமே மனிதனுக்குள் செயல்பட வேண்டிய  ஆறாம் அறிவு செயல்படாமல் உறக்கத்தில் இருப்பதும்  தேவைக்குச் செயல்பட வேண்டிய மனம் ஓயாமல் செயல்பட்டுக் கொண்டு இருப்பதும் தான். விழிப்படையாத பொழுது மனிதனின் மனம் எப்படி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறதென்றால்  உறங்கிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போல் தான் நடந்து கொண்டிருக்கிறது.. இதுவே மனிதனின் வாழ்க்கை விபத்துக்குள்ளாவதற்குக் காரணமாகும்.

 

துர்த்திருஷ்டவசமாக மனிதனுக்கு வரமாக படைக்கப்பட்ட   மனமே மனிதனுக்கு எதிராக மாறிவிட்டது. இல்லை இல்லை மனிதனின் அறியாமையும், அகங்காரமும்  மாற்றிவிட்டது என்று கூறலாம்.

 

மனிதனும் தன் நாகரிக வளர்ச்சியாலும், அறிவியல் வளர்ச்சியாலும் மற்ற உயிரினங்களின் செயல்களோடு தன் செயல்களை ஒப்பிட்டும், வெளிச்சூழ்நிலையில் செயலாற்ற  மனம் சேகரித்த அறிவுத்திறனைப் பார்த்து  தான் சரியாக விழித்த இருப்பதாக  ஏமாந்து கொண்டு இருக்கிறான். 

 

 மனிதன் இந்த மனதின் பிடியில் இருந்து விலகித்  தன் விழிப்பு நிலையை அடையும் போது மனிதனுக்கு பூலோகம் சொர்கமாகும். 

 

 இந்த அத்தியாயத்தில் நாம் மனிதப் பிறவியின் சிறப்புகளையும் , மனிதப்

பிறவிச்  சுமையாக உணர்வதற்கான  காரணமும் பார்த்தோம். அடுத்த பதிவுகளில்  எப்படி மனிதன் தெய்வ நிலையை அடையத் தன் சுயத் தகுதியெல்லாம் இழந்து கொண்டு இருக்கிறான் என்றும்  எப்படி மனிதன் மீண்டும் அந்த தகுதியைப் பெறுவது என்பது பற்றி பார்க்கலாம். 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment